நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு த.தே.பொ.க. கண்டனம்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் கண்டன அறிக்கை
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் கண்டன அறிக்கை
முதலமைச்சர் செயலலிதா தமது இல்லத்தில் தமக்கு வேண்டிய சிலருடன் நடத்திய உரையாடலில் கூறியவை என்று சொல்லி நக்கீரன் வாரமிருமுறை இதழ் அண்மையில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில் எம்.ஜி.ஆர்., "அம்மு (செயலலிதா) மடிசார் மாமி இல்லை. மாட்டுக் கறி சாப்பிடும் மாமி. எனவே மற்ற பிராமணப் பெண்களைப் போல் அவரைக் கருதக் கூடாது" என்று எஸ்.டி.எஸ், கே.ஏ.கே., பொன்னையன் போன்றோரிடம் முன்பு ஒரு முறை கூறினார் எனறு செயலலிதா கூறியதாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.
இதனால் ஆத்திரமடைந்த அ.இ.அ.தி.மு.க. தலைமை தனது கட்சியினரைத் தூண்டி விட்டு 7.1.12 அன்று சென்னை நக்கீரன் அலுவலகம் முன் போராடச் செய்தது. அ.இ.அ.தி.மு.க.வினர் நக்கீரன் அலுவலகத்தைத் தாக்கினர். அலுவலகத்தைப் பூட்டினர். காவல்துறை வேடிக்கை பார்த்தது . கைது செய்வது போல் நடித்து வாகனத்தில் ஏற்றி சற்றுத் தொலைவில் கொண்டுபோய் வன்முறையாளர்களை இறக்கிவிட்டது.
தமிழகமெங்கும் அ.இ.அ.தி.மு.க.வினர் நக்கீரன் இதழ்களைக் கடைகளில் இருந்து பறித்து தீவைத்து எரித்தனர். தமிழக அரசு நக்கீரன் அலுவலகத்தில் மின்சார இணைப்பையும், தண்ணீர்க் குழாய் இணைப்பையும் துண்டித்தது.
அரம்பத்தனம் செய்த அ.இ.அ.தி.மு.க.வினர் மீது வழக்கில்லை. ஆனால் நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்டோர் மீது கொலைமிரட்டல் விட்டது உள்ளிட்ட பிணையில் வரமுடியாத பிரிவுகளில் காவல்துறை பொய் வழக்குப் பதிவு செய்துள்ளது. காவல்துறை ஆளுங்கட்சியின் ஏவல்துறையாகச் சீரழிந்து நீண்ட காலமாகிவிட்டது. செயலலிதாவுக்கும் அது தனிப்பட்ட ஏவல் செய்கிறது.
இதழ் வணிகத்திற்காகவும் தங்களின் அரசியல் விருப்பு வெறுப்பிற்காகவும் முக்கியப் பிரமுகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்து வக்கிரமாகக் கட்டுரைகள் வெளியிடுவதையும், ஊகச் செய்திகளை உலவ விடுவதையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஏற்கவில்லை. இவ்வாறான செயல்கள் இதழ் உரிமையைத் தவறாகப் பயன்படுத்துவதாகும்.
முக்கியப் பிரமுகர் ஒருவரை இழிவுபடுத்தும் நோக்கில் தவறாகச் செய்திகள் வெளியிட்டால் அவ்வேட்டின் ஆசிரியர், கட்டுரையாளர் ஆகியோர் மீது வழக்குத் தொடுக்கலாம். அதை விடுத்து வன்முறை ஏவுவது ஏற்கத் தக்கதல்ல.
செயலலிதா மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்பது உண்மையாயிருந்து அது வெளியிடப்பட்டிருந்தால், எந்த வகையில் அவரை இழிவுபடுத்தியதாகும்?
மாட்டிறைச்சி சாப்பிடுவது இழிவான செயலா? இதற்கு செயலலிதாவும் அ.இ.அ.தி.மு.க.வும்தான் விடையளிக்க வேண்டும்.
நக்கீரன் அலுவலகம் மீது அ.இ.அ.தி.மு.க.வினர் நடத்திய வன்முறை வெறியாட்டத்தையும், தமிழக அரசு மின் இணைப்பு, குடிநீர்க்குழாய் இணைப்பு
ஆகியவற்றைத் துண்டித்ததையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
பெ.மணியரசன்
தலைவர் ,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
9443274002
0 comments:
Post a Comment